Contact us | Make us your homepage | Add to favourites | Home icon Powered by: www.virakesari.lk
CULTURE NEWS
       Search an Event
 
Interview
News ID 9
Posted date 2/1/2010
உடலும் உணர்வும் பேசும் கலை பரதம் நடன தாரகை செல்வி ரமணி
  செல்வி ரமணி பேசத்தொடங்கினால் தமிழ் அருவி போல் கொட்டுகிறது. ஆடத்தொடங்கினால் திரண்டிருக்கும் கூட்டமே தனை மறந்து தாளம் போடுகிறது.""உடலும் உணர்வும் பேசும் கலை பரதம். அதை ஆடுவதற்கு அலாரிப்பு, ஐதீஸ்வரம், வர்ணம் போன்ற இலக்கண முறைகள் நிறைய உண்டு. பெரும்பாலானவர்களுக்கு அது புரியாது. புரியாத அதை தொடர்ந்து ஆடிக் கொண்டே இருப்பதில் எந்த பலனும் இல்லை. அதனால், எல்லோருக்கும் புரியும் படி தமிழில் இருக்கும் புராண, இதிகாச, வாழ்வியல் விஷயங்களை மையக்கருத்தாக வைத்து தமிழ் நடனம் ஆடுகிறேன். அருணகிரிநாதருடைய "திருப் புகழ்' தான் எங்கள் நாட்டியத்தில் முதன்மையானது'' என்று சொல்லும் "நாட்டியத்தாரகை' ரமணி, திருப்புகழின் பெருமைகளைச் சொல்லும் போது சிலிர்க்கிறார்.

""தொலைக் காட்சிகளில் சில தொடர்கள் ஐந்நூறு நாட்களைத் தாண்டி ஓடுகிறது. அவ்வளவு நாட்களாக அதில் உணர்த்தப்படுவது தனி மனித ஒழுக்கம் என்கிற ஒரே ஒரு வரி விஷயம்தான். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு வாழும் மனிதன், பொறாமை பிடித்த மனிதன். மற்றவர்களை வஞ்சிக்கும் மனிதனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அதில் விளக்குகிறார்கள். அவ்வளவு பெரிய விஷயத்தை அருணகிரி நாதர் "அறுகு நுனி ....' என்ற ஒரே ஒரு பாடலில் அற்புதமாய் விளக்கி விடுகிறார்..

"பேசாத வார்த்தைக்கு நீ எஜமான், பேசிய வார்த்தை உனக்கு எஜமான் ஆகிவிடும்' என்பது பொதுவான உண்மை. பல மனிதர்கள் பேசக் கூடாததை பேசிவிட்டு மாட்டிக்கொள்கிறார்கள். தேவையற்றதை பேசாமலே இருப்பதால் ஏற்படும் சந்தோஷத்தை "வசனமிக ஏற்றி மறவாதே...' என்ற பாடலில் அருணகிரிநாதர் அருமையாக விளக்குகிறார்..

இளமைத் துடிப்பின் வேகத்தில் மனிதனிடம் அகந்தை தலைவிரித்து ஆடும். நடுத்தர வயதைக் கடக்கும் போது அவனிடம் ஏற்படும் மன, உடல், மாற்றங்கள் முதுமைக்கு பயந்து அவனிடம் எம பயத்தை உருவாக்கும். ஒரு புறம் சுற்றமும் நட்பும் பிரியும். மறுபுறம் உயிர்ப்பயம் தோன்றும். இந்த இரண்டிற்கும் இடையில் அவன் பரிதவிப்பான். அதை, "தொந்தி சரிய...' என்ற திருப்புகழ் அத்தனை சிறப்பாய் விளக்குகிறது. அதை கேட்கும் மனிதன் நெகிழ்ந்து தன்னை உணர்ந்து திருந்திக்கொள்வான்..

இத்தனை சிறப்புமிக்கவைகளை தமிழில் வைத்துக்கொண்டு வேறு எது எதையோ ஆடிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?.

அதனால்தான், கட்டுக்கடங்கா சந்தங்களைக் கொண்ட திருப்புகழையும் சரணாகதியைச் சொல்லும் திவ்ய பிரபந்தங்களையும் பன்னிரு திருமுறைகளையும் அருட்பாக்களையும் நாட்டியத்தின் வாயிலாக பரப்பிக் கொண்டிருக்கிறோம்'' என்று சொல்லும் செல்வி ரமணி தனது குழுவினருடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இதுவரை ஐந்தாயிரம் மேடைகளில் நாட்டியமாடியுள்ளார். இவருடைய குழுவில் இடம் பிடித்து பாடும் சிறுவனின் பெயர் சீனிவாச ராகவன்..

மண் பானைக்கு மேல் நின்று ஆடும், "குடக்கூத்து நடனம்', ராஜநாகம் போல் சீறிப் பாய்ந்து ஆடும் "பாம்பு நடனம்' தலையில் செம்புடன் தாம்பாளத்தில் ஏறி நின்று ஜாலங்கள் புரியும் "தாம்பாள நடனம்' போன்றவைகளில் ரமணி அற்புதமாகச் ஜொலிக்கிறார்..

குடத்திற்கு மேல் நின்று ஆடும் குடக்கூத்து நடனமும் தமிழ் இலக்கியங்களில் காணப்படுவது தானா?.

""கிருஷ்ண பகவான் கோகுலத்தில் இந்த நடனம் ஆடியதாக இதிகாசம் குறிப்பிடுகிறது. மணி மேகலை இந்த நடனத்தில் தேர்ச்சி பெற்றிருந்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது''.

(கவிழ்த்து வைத்திருக்கும் பானையின் மீது ஏறி, ஜதிக்கு தக்கவாறு மிருதங்கம் மற்றும் சொற்கட்டுக்கு சவால் விடும் விதத்தில் இவர் தில்லானா நடனம் ஆடுகிறார். அறுபது கிலோவிற்கு அதிகமான எடையைக் கொண்ட இவர் ஐந்து கிலோ எடை கொண்ட பானையில் ஏறிநின்று உடலின் மொத்த வலுவையும் கால்களுக்கு கொடுக்காமல் அங்க அசைவுகளை வெளிக்கொணரும் தந்திர நடனமாக இதை ஆடுகிறார். பானைக்கு மேலே நின்று இவர் இருபது நிமிடங்கள் வரை நடனம் ஆடுகிறார்).

பாம்பு நடனத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?.

""இறைவனிடம் போய் நம் உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த நடனத்தை ஆடுகிறேன். குண்டலினி சக்தி நம்மிடம் உறங்கிய நிலையில் இருக்கிறது. அதை தட்டி எழுப்பும் விதத்தில் இந்த நடனத்தை ஆடுவேன். "இறைவா இங்கிருக்கும் அனைவரும் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நானோ உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இங்கிருக்கும் அனைவரும் ஒருசில வினாடிகள் உன் பாதார விந்தத்தை அடையவேண்டும். இந்த புகழ் உன்னை சேர வேண்டும் என்ற உணர்ச்சிப் பிரவாகத்தோடு கடைசியாக ஒரு வட்டம் சுற்றி பாம்புபோல் ஆடுவேன். அப்பேõது அங்கிருக்கும் அனைவரின் பாதங்களையும் மானசீகமாகத் தொட்டு இறைவனிடம் கொண்டு போய் சேர்ப்பேன். அப்போது நடனத்தை பார்த்துக்கொண்டிருப்பவர்களில் பலரது கண்களில் இருந்து அவர்களை அறியாமலே கண்ணீர் வந்துவிடும்''.

ரமணிக்கு வயது 32. பெற்றோர் வெங்கடேஸ்வரன் ருக்மணி அம்மாள். ஐந்து பெண்களில் இவர் கடைசியாகப் பிறந்தவர். ஒன்பதாவது வயதில் சர்வாளி ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பரதம் கற்று சிறு வயதிலே அரங்கேற்றமும் நடத்தியுள்ளார். பாரதி மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கற்றிருக்கிறார். தமிழிசைக் கல்லூரியில் மூன்று வருடங்கள் நடனம் பயின்று ஆடற்கலைவாணி' யாகி இருக்கிறார். பின்பு அதே கல்லூரியில் இரண்டு வருடம் நட்டுவாங்கம் பயின்றுள்ளார். அஞ்சல் வழியில் எம்.எஸ்.சி.யும் கற்றிருக்கிறார். சென்னை அம்பத்தூரில் வசித்துவரும் இவர், "காஞ்சி காமகோடி நாட்டியாலயா' என்ற நாட்டியப் பள்ளியையும் நடத்திவருகிறார்..

முதல் நாட்டிய மேடை அனுபவம் எப்படி இருந்தது?.

""கல்லூரியில் படிக்கும் போது "திருப்புகழில் திருமுருகன் திருவிளையாடல்' நாட்டியத்துக்காக ஆடினேன். அதைப் பார்த்துவிட்டு பல்வேறு கோவில்களில் இருந்து அழைப்பு வந்தது. திருத்தணி கோவில் படி விழாவில் இதுவரை யாரையும் நாட்டியமாட அனுமதிக்கவில்லை. திருப்புகழுக்காக ஆடுவதால் எங்களை அனுமதித்தார்கள்''.

திருப் புகழ் பாடலே புரிவதில்லை என்று பலர் சொல்கிறார்களே?.

""திருப்புகழை மிகச்சிறப்பாக பாடுபவர்களுக்கே அதன் பொருள் புரியாமல் இருக்கிறது. பாட்டு மூலம் புரியாத பொருளை நடனக் காட்சிகள், முக பாவங்கள் மூலம் நன்றாகவே புரிய வைத்து விடலாம்.அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இப்போது குடும்ப உறவுகளில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. மன நெருக்கடி ஏற்பட்டு நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்களும் அதிகம். அவை அனைத்துக்கும் வாழ்க்கை முறை சரியில்லாமல் இருப்பதே காரணம். அவர்களின் வாழ்க்கை முறைகளைச் சரி செய்யும் சிறந்த கருத்துக்கள் ஆன்மிகம் சார்ந்தவைகளாக தமிழ் பக்தி இலக்கியங்களில் உள்ளன. அவைகளை எடுத்து நாட்டியமாக மக்கள் மனதில் பதிய வைப்பதே எங்கள் நோக்கம்''.

கோபம், எரிச்சல், மன அழுத்தம் போன்றவை இன்று மனிதர்களிடம் அதிகமாக இருக்கிறதே. இதற்கு உங்கள் நாட்டியம் தீர்வு தருமா?.

""நாட்டியம் என்பதே மனிதனின் மன உளைச்சலை குறைக்கும் மருந்து தானே. அதிலும் தமிழ் பக்தி இலக்கியங்களில் உள்ள பாடல்களை மையமாகக் கொண்டு நடத்தும் நாட்டியங்கள் கோபம், எரிச்சல் போன்றவைகளை நிரந்தரமாக போக்க வழிகாட்டுகின்றன. திருப்புகழில் ஒரு பாடல். ""வசனமிக ஏற்றி மறவாதே மன துயராற்றில் உழலாதே இசை பயில சடாக்ஷாம் ஆதலாலே இகபர சௌபாக்கியம் அருள்வாயே...'' நாம் ஒன்றுபேச அதற்கு எதிர்வாதமாக இன்னொன்று உருவாகும். தான் சொல்வதைத்தான் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறோம். இதுதான் பிரச்சினைகளின் தொடக்கம். அதனால், அந்த நேரத்தில் எதிர்வசனம் பேசாமல் அமைதி காத்தால் பிரச்சினைகள் உருவாகாமலேயே போய் விடும். அந்த நேரத்தை பயனுள்ளதாகவும் ஆக்கலாம். திருப்புகழ் சொல்லும் இந்த கருத்தையும் நாட்டியத்தில் சொல்கிறோம்'' என்று கூறும் செல்வி ரமணி, ராஜ நாக நர்த்தகி உட்பட ஏராளமான பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
 

 

 

Records 1 to 1 of 1
First | Previous | Next | Last
 
  © Powered by Express Online. All Rights Reserved    
Home